Thursday 19 September 2013

சச்சினுடன் ஓய்வு குறித்து ஆலோசிக்கவில்லை


சச்சினுடன் ஓய்வு குறித்து ஆலோசிக்கவில்லை

 

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருடன், அவரது ஓய்வு குறித்து ஆலோசிக்கவில்லை என்று தேர்வுக் குழுவின் தலைவர் சந்தீப் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
சச்சின் 198 டெஸ்ட் போட்டிகளை விளையாடியுள்ளார். மேலும் 2 டெஸ்ட் போட்டிகளை விளையாடினால், 200 டெஸ்ட் போட்டிகளை விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை அவர் புரிவார்.
வரும் நவம்பர் மாதம், மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களில் விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் சச்சின் விளையாடினால் அவர் சாதனை புரிவார் என்றும், இத்தொடருடன் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்று விடுவார் என்று கூறப்பட்டு வருகின்றது. ஒருநாள் போட்டியில் இருந்து அவர் ஏற்கெனவே ஓய்வு பெற்று விட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தேர்வுக் குழு உறுப்பினர் ஒருவர் சச்சினை சந்தித்ததாகவும், அப்போது அவரது ஓய்வு குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அந்த உறுப்பினர் பாட்டீல் என்றும் கூறப்பட்டது.
இது குறித்து பிடிஐ செய்தியாளரிடம் பாட்டீல் கூறியது:
சச்சினை சந்திப்பது எப்போதும் சிறந்தது. ஆனால், கடந்த 10 மாதங்களாக அவரை நான் சந்திக்கவில்லை. அவரை தொடர்புகூட கொள்ளவில்லை. அவரும் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை. ஓய்வு குறித்து அவரிடம் ஆலோசிக்கப்பட்டதாக வந்த செய்திகள் அபத்தமானது என்று தெரிவித்தார்.
பிசிசிஐ மறுப்பு: சச்சினிடம் ஓய்வு பெறுமாறு பாட்டீல் கூறியதாக வெளிவந்த செய்திகளை பிசிசிஐ புதன்கிழமை மறுத்துள்ளது.
இது குறித்து பிசிசிஐ மூத்த அதிகாரி ராஜீவ் சுக்லா கூறுகையில், "ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் உண்மை இல்லை. இது குறித்து சச்சின் மற்றும் பாட்டீலிடம் பேசினோம். இருவரிடையேயும் அதுபோன்ற (ஓய்வு) பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்று தெரிய வந்தது' என்று தெரிவித்தார்.

keyword:Tamil daily News | Tamilnadu newspaper

No comments:

Post a Comment