Monday 2 December 2013

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவோம் : விஜயகாந்த் வலியுறுத்தல்


மாற்றுத்திறனாளிகள் தினம் உலகம் முழுவதும் டிசம்பர் 3ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. உடல் உறுப்புகளில் குறைபாடுகள் கொண்டு வாழ்ந்து வருகின்ற மாற்றுத் திறனாளிகள் மீது அக்கறை செலுத்தி, அவர்கள் அனைவரும் நம்மில் ஒருவராகத்தான் இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்காகத்தான் உலகம் முழுவதும் மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த இனிய நாளில் அவர்களின் துன்பங்கள் நீங்கி எல்லா வளமும் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
மேலும் அவர் அனுப்பியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, அரசியல் இயக்கங்களிலே தேமுதிகவில் மட்டும்தான் மாற்றுத் திறனாளிகளுக்கென தனி அமைப்பை உருவாக்கி, அவர்களும் அரசியலில் சம உரிமை பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கு சமுதாயத்தில் உள்ள நாம் அனைவரும் நம்முடைய சக்திக்கேற்றவாறு உதவி செய்வதை நம்முடைய இலட்சியமாக கொள்ள வேண்டும். இந்த உணர்வினை பொதுமக்கள் அனைவருக்கும் உண்டாக்குவதே இந்த உன்னத நாளின் குறிக்கோள் ஆகும். ஆகவே மாற்றுத் திறனாளிகளும் நம்மைப் போலவே வாழ்வதற்கு உரிய சூழ்நிலையை உருவாக்குவோம் என்ற சூளுரையோடு எனது இதயமார்ந்த நல்வாழ்த்துகளை இந்த நன்னாளில் தெரிவித்துக் கொள்ளுகிறேன் என்று கூறியுள்ளார்.