ரூ.2 லட்சம் மின் கட்டணம் வந்ததால் அதிர்ச்சி அடைந்த விவசாயி
தர்மபுரி அருகே ரூ.70 மின் கட்டணம் செலுத்தி வந்த விவசாயிக்கு திடீரென ரூ.2 லட்சம் பில் வந்ததால் அதிர்ச்சியடைந்தார்.
தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் ஆல்ட்ரிப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னசாமி (40). விவசாயியான இவர் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டணமாக ரூ.70 செலுத்தி வந்துள்ளார். கடந்த வாரம் அவரது வீட்டில் மின்சார மீட்டர் ரீடிங் எடுக்கப்பட்டது. அதில், ரூ.2 லட்சம் மின் கட்டணம் செலுத்தவேண்டும் எனவும், நவம்பர் 10ம் தேதிக்குள் செலுத்தவில்லை எனில் மின்சார இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் விவசாயி சின்னசாமிக்கு மின் வாரிய கணக்கீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சின்னசாமி மின்வாரிய அலுவலகத்தில் முறையிட்டு, சாதாரண குடும்பத்தை சேர்ந்த எனக்கு மாதம்தோறும் ரூ.70க்கும் குறைவாகத்தான் மின் கட்டணம் வரும். மேலும் எங்கள் வீட்டில் ஒரு பேன், ஒரு டி.வி, 2 குண்டு பல்பு மட்டுமே பயன்படுத்துகிறோம். தற்போது திடீரென மின் கட்டணம் லட்சக்கணக்கில் வந்துள்ளது. ஏதோ தவறு நடந்துள்ளது. இதை சரி செய்து நியாயமான கட்டணத்தை எனக்கு நிர்ணயிக்கவேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார். இதேபோன்று அதே ஊரை சேர்ந்த பலருக்கும் ஆயிரக்கணக்கில் பில் வந்துள்ளதாக தெரிகிறது. இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ ராமரை சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment