Sunday 10 November 2013

சவூதியில் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை

சவூதியில் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை

சவூதியில் தவிக்கும் தமிழர்களை மீட்டு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-
சவூதி அரேபியாவில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட நிதாகத் சட்டத்தால் அங்கு பணியாற்றி வந்த இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி நிதாகத் சட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்து 1.34 லட்சம் பேர் பேர் தாயகம் திரும்பியுள்ளனர். இவர்களில் சுமார் 20 ஆயிரம் பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இவர்கள் தவிர மீதமுள்ள 12 லட்சம் இந்தியர்களின் வேலைவாய்ப்பு நிலைமை என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஆனால், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் உள்பட பல லட்சம் இந்தியர்கள் உரிய ஆவணங்கள் இல்லாததால் அங்கு வேலை செய்ய முடியாமலும், தாயகம் திரும்ப முடியாமலும் அவர்கள் தங்கியுள்ள வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். மேலும், அவர்கள் உணவு, தண்ணீரின்றி அவதிப்படுவதாக அங்கிருந்து திரும்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்களை உடனடியாக மீட்டு அழைத்து வராவிட்டால் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்படும் ஆபத்து உள்ளது.
இதை உணர்ந்த கேரள அரசு, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தை மட்டும் நம்பிக் கொண்டிருக்காமல், வெளிநாடுவாழ் மலையாளிகள் விவகாரத்துறை மூலம் சவூதி அரேபியத் தலைநகர் ரியாத், ஜெட்டா, தமாம் ஆகிய இடங்களுக்கு ஆலோசனைக் குழுக்களை அனுப்பி உரிய ஆவணங்கள் இல்லாமல் தவிக்கும் மலையாளிகளை மீட்டு வர நடவடிக்கை எடுத்திருக்கிறது.
சவுதியிலிருந்து திரும்புபவர்களுக்கு இலவச பயணச் சீட்டு உள்ளிட்ட சலுகைகளை அறிவித்துள்ள கேரள அரசு, விரைவில் தனி விமானங்களையும் அனுப்ப திட்டமிட்டிருக்கிறது.
ஆனால், சவூதியில் தவிக்கும் தமிழர்களை மீட்டுவர அத்தகைய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
எனவே, தமிழர்களை மீட்டு வருவதற்கான நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

keywords:Tamil daily News | Tamilnadu newspaper

No comments:

Post a Comment